மாணவ, மாணவிகளிடயே அறிவியல் ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச கல்விச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் எல்.மேரி சீத்தா, எஸ்.மாடசாமி ஆகியோர் கூறியதாவது:
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதற்கிடையே மாணவர்களிடம் அறிவியல் விழிப்புணர்வு சுற்றுலாவிற்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி முதல்கட்டமாக ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு வட்டார வளமையத்திற்குட்பட்ட 53 மாணவ மாணவியர் மதுரை வேளாண்மைக் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக அறிவியல் மையம், ஆவின் பால் உற்பத்தி நிலையம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாவட்டத்தில் மொத்தம் 800 மாணவ மாணவியர் இந்த சுற்றுலாவில் பங்கேற்க உள்ளார்கள். இந்த கல்விச் சுற்றுலா மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை உருவாக்கவும், அறிவியல் கண்டுபிடிப்பு சாதனைகள் குறித்த ஊக்கப்படுத்தவும் உதவும்.
குறிப்பாக இந்த சுற்றுலாவில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அறிவியல் பாடத்தில் கடந்த ஆண்டு அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதாயும் அவர்கள் கூறினர்.
இவர்களுக்கு மதிய உணவு, தேனீர், பிஸ்கட், நோட்டு, தொப்பி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது.