/

ஓகி புயல் சேதங்கள் பற்றிய அறிக்கை: மத்திய அரசுக்கு இன்று சமர்ப்பிப்பு! 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் பாதிப்பினை ஏற்படுத்திய ஓகி புயலால் உண்டான சேதங்கள் பற்றிய முழுமையான அறிக்கையினை மத்திய அரசுக்கு இன்று தமிழக அரசு சமர்ப்பிக்கிறது.

News image
Updated On :17 டிசம்பர் 2017, 8:18 am

DIN

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் பாதிப்பினை ஏற்படுத்திய ஓகி புயலால் உண்டான சேதங்கள் பற்றிய முழுமையான அறிக்கையினை மத்திய அரசுக்கு இன்று தமிழக அரசு சமர்ப்பிக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒகி புயல் கடுமையான சேதத்தினை உண்டாக்கியது. புயலினால் பெய்த பெருமழையின் காரணமாக மரம் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததிலும் மாவட்டம் முழுவதும் 11 பேர் பலியானார்கள். அத்துடன் தென்னை, ரப்பர், தேக்கு, வாழை மரங்களை வேரோடு சாய்ந்தன. ஏராளமான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகின.

இதன் காரணமாக குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், நாசமான பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் , எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கன்னியாகுமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய  சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்தது. இந்த குழு ஓகி புயலால் உண்டான சேதங்கள் பற்றிய முழுமையான அறிக்கையினை தமிழக அரசிடம் சமர்பித்தது.

இந்த அறிக்கையினை முன்வைத்து முதல்வர பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் ஞாயிறு காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குழுவின் அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதனுடன் தமிழகத்திற்கு தேவையான நிவாரண நிதியும் கோருவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.