வேலூர்: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த 25 வயது மாணவி இலக்கியா, யுபிஎஸ்சி தேர்வில் எஸ்சி பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆதரவற்ற பெண் என்ற அடையாளத்தை இன்று மாற்றி அமைத்து சாதித்துள்ளால் இலக்கியா. எந்த தடைக்கல்லும் எனக்குப் படிக்கல்லே என்று செய்து காட்டியுள்ளார். பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில், தனது உறவினரின் பராமரிப்பில் வளர்ந்த இலக்கியா, யுபிஎஸ்சி தேர்வில் 298வது ரேங்க் பெற்றுள்ளார்.
இது குறித்து இலக்கியா கூறுகையில், எனது உறவினர் வேதநாயகிதான் எனக்கு முன்னோடி. அவர் தான் என்னை ஆங்கில இலக்கியம் எடுத்துப் படித்து, முதுநிலைப் பட்டப்படிப்பில் சமூகப் பணியை எடுத்துப் படிக்குமாறு கூறினார். அவரது வழிகாட்டுதல்தான் நான் அடைந்த வெற்றிக்குக் காரணம் என்றார்.
இலக்கியா ஏழாம் வகுப்பு படித்த போது கார் விபத்து ஒன்றில் பெற்றோரை இழந்தார். அதன்பிறகு, இலக்கியா மற்றும் அவரது இரண்டு சகோதரிகளையும் வேதநாயகிதான் பராமரித்து வந்தார்.
அரசு சாரா அமைப்பில் பணியாற்றி வந்த வேதநாயகி, மிகவும் பின்தங்கிய மக்களுக்காகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகவும் பணியாற்றி வருகிறார். நானும் அவரைப் போலவே பின்தங்கிய மக்களுக்காகப் பணியாற்ற விரும்புகிறேன் என்கிறார்.
"என் தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். ஆனால், அவர் இறந்த பிறகு, எனக்கு 18 வயது ஆகும் வரை ஓய்வூதியம் கிடைக்கப்பெறவில்லை. அரசு நடைமுறைகள் அவ்வளவு காலம் எடுத்தன. எங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டது. ஆனால், எங்கள் தாய் போல அவர் பராமரித்து வந்தார்" என்று வேதநாயகி குறித்து குறிப்பிடுகிறார்.