கிருஷ்ணகிரி: ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டிடிவி.தினகரனை அதிமுக தொண்டர்களும் சரி, ஆர்.கே.நகர் மக்களும் சரி ஏற்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் இன்று பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தமிழிசை சவுந்தரராஜன் வந்திருந்தார்.அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டிடிவி.தினகரனை அதிமுக தொண்டர்களும் ஆர்.கே.நகர் மக்களும் ஏற்க மாட்டார்கள். திமுக தவிர எந்த கட்சியின் ஆதரவையும் ஏற்கத் தயாராக இருக்கிறோம் என்று தினகரன் கூறியிருப்பது அவரது தார்மீக உரிமை. ஆனால், ஊழலற்ற கட்சியையே பாஜக ஆதரிக்கும்
மேலும் பேசிய அவர், 'ஆர்.கே.நகரில் திமுக முன்னிறுத்தியிருக்கும் வேட்பாளரை வைத்துப் பார்க்கும்போது, திமுக இந்த இடைத்தேர்தலில் தீவிரம் காட்டவில்லையோ எனத் தோன்றுகிறது" என்றார்.
இவ்வாறு தமிழிசை தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.