

இன்று காலை சென்னையில் நடந்த கார் விபத்தில் கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் பரிதாபமாகப் பலியானார்கள்.
இன்று காலை 3 மணிக்கு சென்னை சாந்தோம் சாலையில் அஸ்வின் ஓட்டி வந்த விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார், வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்து மரத்துக்கும் சுவருக்கும் இடையே மோதி விபத்துக்குள்ளானது. இதில் உடனே காரில் தீ பரவியதால், அஸ்வினும் அவரது மனைவி நிவேதிதாவும் பரிதாபமாக உடல் கருகி உயிர் இழந்தார்கள். நிவேதிதா ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள். இருவரின் உடலும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அடையார் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள்.
கார் எரிந்துகொண்டிருந்தபோது சிலர் அதை செல்போன் வழியாக வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருடைய உறவினர் ஒருவர் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: அஸ்வின் ஃபார்முலா ஒன் பந்தயங்கள் வரை கலந்துகொண்டுள்ளார். முதலில் கார், விபத்தில் சிக்கியுள்ளது என்றுதான் எனக்குத் தகவல் வந்தது. ஆனால் இங்குவந்த பிறகுதான் அஸ்வினும் அவர் மனைவியும் காரோடு எரிந்து உயிரை விட்டது தெரியவந்தது. அஸ்வின் குடிபோதையில் காரை ஓட்டினாரா என்று கேள்வி எழுப்புகிறீர்கள். அஸ்வினுக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.