பிரதமர் மோடிக்காக உடைக்கப்பட்ட சென்னை ஐஐடி சுற்றுச் சுவர்: கறுப்புக் கொடி போராட்டம் காரணமா? 

வரும் வியாழன் அன்று சென்னையில் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடிக்காக, ஐஐடி வளாக சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டுள்ள சம்பவம்... 
பிரதமர் மோடிக்காக உடைக்கப்பட்ட சென்னை ஐஐடி சுற்றுச் சுவர்: கறுப்புக் கொடி போராட்டம் காரணமா? 
Published on
Updated on
1 min read

சென்னை: வரும் வியாழன் அன்று சென்னையில் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடிக்காக, ஐஐடி வளாக சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையினை  ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் மத்திய பாதுகாப்புத் துறையின் சார்பில் பாதுகாப்புத் தளவாட நிறுவனங்களின் கண்காட்சி வரும் வியாழன் அன்று (12.04.18) நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியினை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார். 

அன்று காலை தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேராக திருவிடந்தை செல்கிறார். அங்கு கண்காட்சியினைத் துவக்கி வைத்த பிறகு, சாலை மார்க்கமாக அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வந்து, அங்கு நடைபெற உள்ள பொன்விழா நினைவு கட்டட திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பதாகத் திட்டம் இருந்தது.

ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, 12 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக , அவருக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பொது மக்களுக்கு முன்னரே வேண்டுகோள் விடுத்துள்ளன.

எனவே தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கும் பொருட்டு திருவிடந்தையில் இருந்து சாலை மார்க்கத்திற்குப் பதிலாக, அங்கிருந்தும் ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் இடத்திற்கு பிரதமர் வருவது  என்று  முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அருகில் உள்ள ஐஐடி வளாக மைதானத்தில் பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்க முடிவு செய்யப்பட்டது. அதனை ஒட்டியுள்ள சுற்றுச் சுவரை இடித்து அங்கிருந்து பிரதமரின் கார் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவர் நேராக விழாவுக்கு சென்று விட்டு, மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் விமான நிறுவனத்திற்கு சென்று விடுவார் என்று தெரிகிறது.

எதிர்கட்சிகள் நடத்த உத்தேசித்துள்ள கறுப்புக் கொடி போராட்ட சர்ச்சையினைத் தவிர்க்கவே பிரதமர் இப்படி ஒரு மாற்று ஏற்பாட்டினை செய்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com