

பிரதமர் மோடி வருகிற 25-ஆம் தேதி புதுவை வருவதையொட்டி, பிரதமர் அலுவலக பாதுகாப்புப் படை அதிகாரிகள் புதுச்சேரியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
புதுவையை ஒட்டிய தமிழகப் பகுதியான ஆரோவில் பொன் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற 25-ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகிறார்.
காலை 10.45 மணிக்கு விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்தில் வந்து இறங்கும் அவர், அரவிந்தர் ஆசிரமத்துக்குச் செல்கிறார்.
பின்னர், நண்பகல் 12 மணிக்கு அங்கிருந்து ஆரோவில் செல்கிறார். அங்கு நடைபெறும் பொன் விழாவில் பங்கேற்றுப் பேசுகிறார்.
பின்னர், புதுச்சேரி திரும்பும் அவர், மாநில பாஜக சார்பில் லாஸ்பேட்டையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
தொடர்ந்து 4 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி, புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பிரதமரின் பாதுகாப்புக்காக 8 குண்டு துளைக்காத கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிலையில், சிறப்பு பாதுகாப்பு படை பிரிவு அதிகாரி சர்மா தலைமையில் 50 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வியாழக்கிழமை புதுச்சேரி வந்தனர்.
அவர்கள் பிரதமர் வந்து இறங்கும் விமான நிலையம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், மேடை ஆகியவற்றை பார்வையிட்டனர்.
புதுவை டிஐஜிக்கள் ராஜீவ் ரஞ்சன், சந்திரன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் உடனிருந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் தொலைவு, பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை ஏற்பாடுகளை விளக்கிக் கூறினர்.
பின்னர், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் பகுதிகளிலும் சிறப்பு பாதுகாப்புப் படை பிரிவு அதிகாரிகள் பார்வையிட்டனர். பிரதமரின் பாதுகாப்பு கருதி அரவிந்தர் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள வீடுகள், விடுதிகளில் இருப்பவர்களின் விவரங்களை காவலர்கள் சேகரித்து வருகின்றனர்.
பிரதமர் வருகை தரும் பகுதிகள் சிறப்பு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. விழா நடைபெறும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணிக்காக புதுச்சேரி வரும் 4 தொகுப்பு துணை ராணுவப் படையினருடன், புதுவை ஐஆர்பிஎன் காவலர்கள் 300 பேர் உள்பட மொத்தம் 1000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.