காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி நலம்பெற இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா கடிதம் எழுதி எம்பி மூலம் அனுப்பியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, ரத்த அழுத்த குறைபாடு காரணமாக சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, மாநிலம் மட்டுமின்றி தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து நலம் விசாரித்து செல்கின்றனர்.
இந்த வரிசையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனாவும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கடிதம் மூலம் நலம் விசாரித்துள்ளார். இந்த கடிதத்தை இலங்கை எம்பி ஆறுமுகன் தொண்டமான் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து ஸ்டாலினிடம் வழங்கினார். இதையடுத்து, அவரும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்.
இலங்கை அதிபர் அந்த கடிதத்தில், "கருணாநிதி விரைவில் குணமடைந்து மீண்டும் மக்கள் பணிகளை தொடர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.