ஹிமாசல் மழை -வெள்ளம்: 62 தமிழர்கள் சிக்கித் தவிப்பு

ஒசூரிலிருந்து குலு, மணாலிக்கு சுற்றுலா சென்ற 21 பேர், திருச்சியைச் சேர்ந்த 41 பேர் என மொத்தம் 62 பேர் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர். 
Updated on
1 min read

ஒசூரிலிருந்து குலு, மணாலிக்கு சுற்றுலா சென்ற 21 பேர், திருச்சியைச் சேர்ந்த 41 பேர் என மொத்தம் 62 பேர் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர். 
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட ஒசூரிலிருந்து 14 பெண்கள், 
6 குழந்தைகள் உள்பட மொத்தம் 21 பேர், வட மாநிலங்களுக்கு கடந்த 21-இல் சுற்றுலா சென்றனர். 
ஹிமாசல பிரதேசத்துக்குள்பட்ட குலு, மணாலிக்கு செப். 22-இல் சென்ற இவர்கள், திங்கள்கிழமை (செப்.24) சொந்த ஊர் திரும்ப இருந்தனர். மணாலியில் தொடர்ந்து மழை பெய்து மண் அரிப்பு, நிலச் சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 
செல்லிடப்பேசியில் அவர்கள் கூறியது: உணவகத்தில் போதிய உணவு கிடைக்கவில்லை. கிடைக்கும் உணவின் விலையும் மிகவும் அதிகம். தொடர் மழையால் சிக்கியுள்ள எங்களை மீட்க கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரிடம் கேட்டபோது, அவர் கூறியது: ஒசூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும், திருச்சி மாணவர்களையும் மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுவருகிறது என்றார்.
திருச்சியிலிருந்து... திருச்சி பள்ளியொன்றிலிருந்து 31 மாணவர்கள், 10 ஆசிரியர்கள் என 41 பேர், தில்லி வழியாக ஹிமாசலப் பிரதேச மாநிலம் குலு, மணாலிக்கு செப்.21ஆம் தேதி சென்றனர். தொடர் மழையால் மண் அரிப்பு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. 
அவர்கள் 27-இல் ஊர் திரும்பத் திட்டமிட்டிருந்தனர். தங்குமிடத்திலும் உணவுக்குப் பிரச்னையில்லை. அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக செல்லிடப்பேசியில் திருச்சிக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com