சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக, வடதமிழகத்திலும், தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென் மேற்குப் பருவக்காற்றின் தாக்கம் ஆகியவை காரணமாக சனிக்கிழமை (ஆக.17) பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை கிண்டி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், மடிப்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர், அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அம்பத்தூர், அயனாவரம், ராமாபுரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
அதுபோன்று புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அதிகப்படியான மழை பெய்து வருகிறது.