மீத்தேன் போலவே 'ஒரே நாடு,  ஒரே ரேஷன்' திட்டத்திலும் ஏமாற்றும் ஸ்டாலின்: டிடிவி கடும் தாக்கு 

மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டதைப் போல 'ஒரே நாடு,  ஒரே ரேஷன்' திட்டத்திலும் ஸ்டாலின் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

சென்னை: மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டதைப் போல 'ஒரே நாடு,  ஒரே ரேஷன்' திட்டத்திலும் ஸ்டாலின் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பொது விநியோக முறையின் கீழ் தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்கள் பெற்றுவரும் விலை இல்லா அரிசி உள்ளிட்டவை குறித்த தெளிவான உத்தரவாதம் பெறாமல், 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டத்தில் தமிழகம் இணையும் என்று அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. அதே நேரத்தில், மத்திய அரசில் அங்கம் வகித்த போது மக்களைப் பாதிக்கும் இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்த தி.மு.க, இப்போது எதிர்ப்பது போல் நாடகமாடுவதும் கண்டிக்கத்தக்கது.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி செய்த போது 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மசோதாவின் ஓர் அங்கம் தான்  'ஒரே நாடு,  ஒரே ரேஷன்' திட்டம். இன்றைக்கு இதனை எதிர்ப்பதாக சொல்லும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டதைப் போல இத்திட்டத்திற்கு காரணமான உணவு பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் வாக்களித்து நிறைவேற்றியதையும் வசதியாக மறைத்துவிட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்.

இத்திட்டத்தின் மூலம் போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதாகவும், மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்வோருக்கு சிக்கல் இல்லாமல் ரேஷன் பொருட்கள் வழங்கப் போவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இதனைச் செய்வதற்கு எத்தனையோ மாற்றுவழிகள் இருக்கின்றன. மாநில அரசு தங்களுடைய மாநில மக்களின் தேவைக்கு ஏற்ப பொது விநியோக முறையின் கீழ் திட்டங்களைச் செயல்டுத்துவதிலும் சிக்கல் ஏற்படும். கூட்டாட்சி நடக்கிற இந்தியாவில் நேரடியாக மக்களைப் பாதிக்கிற பொது விநியோகம் போன்றவற்றில் மத்திய - மாநில அரசுகள் ஒருமித்த கருத்தோடு இணைந்து செயல்படும்போது மட்டுமே மக்களுக்கு பலன் கிடைக்கும். இதையும் மொத்தமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வது சரியாக இருக்காது.

இந்நிலையில் ஒரே ரேசன் திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்த விரும்பினால் அதற்கு முன்பாக தமிழகத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைப் போதுமான அளவிற்கு ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இலவச அரிசி திட்டத்திற்கு எதிர்காலத்தில் எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற உறுதிமொழியை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும். தமிழகத்தில் நடைமுறையிலுள்ள பண்டிகை கால அன்பளிப்புகள் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்கள் பிற மாநிலத்தவருக்கு இல்லை என பட்டும் படாமலும் கூறுகிறார்கள். அதைப்பற்றியும்,  ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டத்தில் தமிழக மக்களுக்கு இருக்கிற ஆபத்துகளை நீக்கி, எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பது குறித்தும் பழனிசாமி அரசு விரிவான விளக்கத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com