ரஜினி அரசியல் கட்சி தொடங்கியதற்கு வரவேற்பு அளிப்பதாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி அருகே துப்புக்குண்டுவில் புதிதாக அமையவுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிடுவதற்கு வந்திருந்த துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
'ரஜினி அரசியல் கட்சி தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அவரது வரவு நல்வரவாக இருக்கட்டும். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
அரசியலில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நிகழலாம். வாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணி அமையும்' என்று பதிலளித்துள்ளார்.
முன்னதாக ரஜினியின் அரசியல் வருகை குறித்து முதல்வர் பழனிசாமி, ரஜினியின் பேட்டியை முழுமையாகப் பார்க்கவில்லை என்றும் பார்த்தபின்னர் கருத்து கூறுவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாகவும், கட்சி தொடங்கப்படும் தேதி டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.