

திருப்பூர்: உப்பாறு அணைக்குத் தண்ணீர் திறக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் மணி அடிக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி பிரதான வாய்க்கால் மூலம் அரசூர் ஷட்டரிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முதல் அணை முன்பாகப் பந்தலிட்டு தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தின் 11-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மணி அடிக்கும் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி முருகானந்தம் கூறியதாவது: திருமூர்த்தி அணையிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று 11 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செவிசாய்க்காமல் உள்ளனர். ஆகவே, எங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மணி அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.