பச்சமலையில் மினி கிளினிக்: மருத்துவத்துக்காக பல கி.மீ. சென்றுவந்த மலைவாழ் மக்கள்  மகிழ்ச்சி

மாயம்பாடியில் அம்மா சிறு மருத்துவமனை வியாழக்கிழமை திறக்கப்பட்டதால், மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பச்சமலையில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பச்சமலையில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தம்மம்பட்டி: கெங்கவல்லி ஒன்றியம் பச்சமலை ஊராட்சியில் மருத்துவ வசதிக்காக பல கி.மீ.தூரம் சென்றுவந்த மலைவாழ் மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், மாயம்பாடியில் அம்மா சிறு மருத்துவமனை வியாழக்கிழமை திறக்கப்பட்டதால், மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பச்சமலை ஊராட்சியில் வெங்கமுடி, பழையூர்,சின்னபக்களம்,பெரியபக்களம், ஓடைக்காடு, ஓடைக்காட்டுபுதூர், நடுவஞ்சாரை,தாழ்வஞ்சாரை, மயிலாக்குளம்,சின்னமங்களம், பெரியமங்களம், நல்லமாத்தி, சின்னநாகூர்,பெரியநாகூர், மேலங்காடு, மேல்வஞ்சாரை, கீழ்வஞ்சாரை, பெலாமரத்தூர், வெள்ளரிக்காடு,சேத்தகம், சேம்பேரி, மாயம்பாடி, கொடுங்கல், முள்ளிக்குளம், நெய்வாசல், புனவரை, மால்பள்ளி, உதம்பியம், எடப்பாடி, கீழ்பால்தாங்கரை, மேல்பால்தாங்கரை, கட்டக்காடு, வேப்படி, வேப்படிபாலக்காடு ஆகிய 33 மலைக்கிராமங்கள் உள்ளன.

33 ஊர்களிலும் மொத்தம் 9500 பேர் வசித்து வருகின்றனர். அனைத்து ஊர்களுக்கும் பெரியமங்களத்தில் உள்ள ஒரே ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டும் மருத்துவ வசதிகளை வழங்கி வந்தது. இங்கு வந்து சிகிச்சை பெற மலைவாழ் மக்கள்,குறைந்தது 20 கி.மீ. தூரம் வரை நடந்தோ,சொந்த வாகனங்களில் வந்துதான் சிகிச்சை பெற முடியும். மழைக்காலங்களில் பச்சமலையின் அனைத்து ஊர்களுக்கும் ஒரே ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வருவது மிகுந்த சிரமத்தை தந்துவந்தது.

இந்நிலையில், கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் துரை.ரமேஷ், கட்சி சார்பில் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பச்சமலை பகுதிக்கு மருத்துவ வசதி தேவை குறித்து மலைவாழ் மக்கள் தெரிவித்திருத்திருந்தனர். 

இதகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநில கூட்டுறவு வங்கித்தலைவர் இளங்கோவனிடமும், துரை.ரமேஷ் ,கெங்கவல்லி ஒன்றியத்தில் மருத்துவ வசதியில்லாத பகுதியாக இருக்கும் பச்சமலையில் அம்மா சிறு மருத்துவமனையை திறக்க கோரிக்கை மனு அளித்திருந்தார். 

அதன் பயனாக,கெங்கவல்லி ஒன்றியத்திற்கு அம்மா சிறு மருத்துவமனையை, ஒன்றை பச்சமலை ஊராட்சி, மாயம்பாடியில் திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மாயம்பாடியில் அம்மா சிறு மருத்துவமனை திறப்புவிழா வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இதற்கு செந்தாரப்பட்டி மகளிர் பள்ளி பிடிஏ தலைவர் துரை.ரமேஷ் தலைமை வகித்தார். அம்மா சிறு மருத்துவமனையை கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினர் மருதமுத்து திறந்துவைத்து, கர்ப்பணிகளுக்கு தேவையான மருத்துவ பெட்டகங்களை வழங்கி, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ராஜா, ஆத்தூர் சுகாதாரமாவட்ட மருத்துவ அலுவலர் செல்வக்குமார், தம்மம்பட்டி ஸ்ரீகுமரன்,கெங்கவல்லி சிவப்பிரகாசம், கூடமலை முத்துவேல், செந்தாரப்பட்டி பழனிச்சாமி, வட்டார தலைமை மருத்துவர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாயம்பாடி சிறு மருத்துவமனை திறக்கப்பட்டது குறித்து மாயம்பாடி பகுதி மலைவாழ்மக்கள் கூறியதாவது:  எங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால்,குறைந்ததது 15 கி.மீ.முதல் 20 கி.மீ.தூரம் வரை சென்று பெரியமங்களத்திற்கும், திருச்சி மாவட்டம் டாப் செங்காட்டுப்பட்டிக்கும்தான் சென்று வந்தோம். பச்சமலையில் 11 கிராம மக்களுக்கு நாங்கள் முழு மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் அம்மா மருத்துவமனை வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது. மேலும் இங்கு கூடுதல் மருத்துவ வசதிகளை அரசு ஏற்படுத்தி தரவேண்டும். சிறப்பு மருத்துவர்களை மாதத்தில் குறிப்பிட்ட நாள்களில் இங்கு வந்து சிகிச்சை தர ஏற்பாடு செய்யவேண்டும் என்றனர்.

கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியிலேயே மருத்துவ வசதியில் மிகவும் பின்தங்கிய பகுதியான பச்சமலையில் அம்மா சிறு மருத்துவமனை அமைக்கப்பட்டது மலைவாழ்மக்களின் வாழ்வில் ஒரு மைல்கல் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com