மரக்காணத்தில் குளத்தை துார்வாரியபோது பழமை வாய்ந்த மகா விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், பூமிஸ்வரன் கோவில் அடுத்த கரிப்பாளையத்தில் உள்ள பழைய எட்டியான் குளத்தை, குடிமராமத்துப் பணி மூலம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை பொக்லையன் மூலம் குளத்தின் மையப் பகுதியில் பள்ளம் தோண்டியபோது, அங்கு 4 அடி உயரத்தில் மகா விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
குளத்தில் மகா விஷ்ணு சிலைக் கண்ட அப்பகுதி மக்கள் அதனை மீட்டு, அருகில் உள்ள பூமிஸ்வரன் கோயில் வளாகத்தில் வைத்து பூஜைகள் செய்தனர்.
தகவலறிந்த மரக்காணம் வட்டாட்சியர் ஞானம், சம்பவ இடத்திற்கு வந்து மகாவிஷ்ணு சிலையைப் பார்வையிட்டு அங்கிருந்த பொது மக்களிடம் சிலை குறித்து கேட்டறிந்தார். இந்த மகா விஷ்ணு கற்சிலை சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறினர்.