திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முழுநலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட உறவினர் திருமண விழாவில் பங்கேற்று வந்த அவரது மனைவி மற்றும் மகள் உள்பட குடும்பத்தில் மூவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில், ஊரடங்கின் போது மக்களுக்கு தேவையான உதவிகளைத் தொய்வில்லாமல் வழங்கி வந்த வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ கொவைட்19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து அவரிடம் பேசி வருகிறேன். உற்சாகமாகப் பேசுகிறார்.
முழுநலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும்! இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.