தமிழக அரசின் 144 தடையுத்தரவும், சமூக விலகலும் கடுமையாக காவல், வருவாய், நகராட்சி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் அரசு அதிகாரிகள் தரப்பில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் துறையூரில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சாமிநாதன் காய்கறி அங்காடியும், உழவர் சந்தையும் போதிய இடவசதியின்றி மக்கள் நெருக்கடியாகவே காணப்பட்டதால் சமூக விலகல் என்பது சாத்தியமில்லாமல் இருந்தது. இதனால் திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, முசிறி கோட்டாட்சியர், துறையூர் வட்டாட்சியர், நகராட்சி பொறுப்பு ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் துறையூர் காய்கறி அங்காடியை தற்காலிகமாக துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு மாற்றுவதற்கு வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனர்.