வீரவநல்லூரிலிருந்து கரோனா பாதுகாப்புப் பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற ஊர்க்காவல் படை வீரர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
களக்காடு, கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் சுப்பையா ரமேஷ் (45). எலக்ட்ரிசியன் பணி புரிந்து வந்த இவர் ஊர்க்காவல் படையிலும் 7 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணம் முடிந்து லதாசங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதுகாப்புப் பணிக்காக வீரவநல்லூர் சென்றிருந்தார்.
மதியம் 2 மணிக்குப் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் கரோனா தொற்று இல்லாமல் இருப்பதற்காக சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றாராம். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்துத் தகவலறிந்த சேரன்மகாதேவி காவல்துறையினர் சுப்பையா ரமேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கரோனா பாதுகாப்புப் பணிக்கு வந்து திரும்பிய நிலையில் உயிரிழந்த இவரது குடும்பத்தாருக்கு அரசு உரிய நிவாரண்ம் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.