குரூப் 4 தேர்வைத் தொடர்ந்து குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி கிராம நிா்வாக அலுவலா் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கான முடிவுகள் கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டன. தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தேர்வு முடிவுகளில் ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் தேர்வு நடைபெற்ற மையங்களில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்(1606), கீழக்கரை (1608) ஆகிய ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தான் தரவரிசையில் மாநில அளவில் 40 பேர் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். சமூக இடஒதுக்கீடு ரீதியாக முன்னிலை பெற்றவர்களும் இந்த இரு தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதியுள்ளனர்.
குறிப்பிட்ட இரண்டு மையங்களில் இருந்து முன்னிலை இடங்களில் பெரும்பாலானவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதால், இது தேர்வர்கள் மத்தியில் சந்தேகத்தையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்வு எழுதியவர்களில் 15 பேர் மாநிலங்கள் அளவில் முதல் 15 இடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆவணங்களை சரிபார்த்த பின்பு தான் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, 2017-18 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வு எழுதியவர்களில் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் இருந்து எழுதியவர்கள் 30க்கும் மேற்பட்டோர், முதல் 50 முன்னிலை இடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த தொடர்ச்சியான புகார்கள் தேர்வர்கள் மத்தியில அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.