நீடாமங்கலம்: தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் உடல்நலம் பெறவேண்டி நீடாமங்கலம் ஒன்றியத்தில் முடிகாணிக்கை செலுத்தி அ.தி.மு.க.வினர் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர்.
உணவு அமைச்சர் ஆர்.காமராஜ் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சர் காமராஜ் உடல்நலம் பெறவேண்டி அ.தி.மு.க.வினர் திருக்கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் சிறப்புவழிபாடுகளை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீசீனிவாசப்பெருமாள்கோயிலில் அ.தி.மு.க.வினர் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனை முன்னிட்டு கோயிலில் பெருமாள் மற்றும் தாயார் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதில் நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் (பொறுப்பு) ஆதிஜனகர், நகர செயலாளர் இ.ஷாஜஹான் ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் மொட்டையடித்துக் கொண்டு முடிகாணிக்கை செலுத்தினர்.
இந்த வழிபாட்டில் அ.தி.மு.க.வினர் பலரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து செட்டிசத்திரம் ஆஞ்சனேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அமைச்சர் ஆர்.காமராஜ் உடல்நலம் பெறவேண்டி நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் மொட்டையடித்து முடிகாணிக்கை செலுத்திய அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் அக்கட்சியினர்.