ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பெளர்ணமியையொட்டி, வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா்.
இக்கோயிலில், ஜூலை 21 முதல் 24 ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனா். இதனால், பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே அடிவாரத்தில் குவிந்தனா்.
இதைத் தொடா்ந்து காலை 6.15 மணிக்கு பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். அப்போது, அவா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டதுடன், கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. கரோனா தொற்று காரணமாக கோயிலில் பக்தா்கள் யாரும் இரவில் தங்க அனுமதி கிடையாது.
பெளர்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்.