காங்கயம் தொகுதியில் போட்டியிடுவதற்கு விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்ற விவசாயிகள்
காங்கயம்-வெள்ளகோவில் பிஏபி பாசன விவசாயிகள், தங்களது பகுதிக்கு முறையாக நீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, நடைபெறவுள்ள தேர்தலில் திரளாகப் போட்டியிட


காங்கயம்: காங்கயம்-வெள்ளகோவில் பிஏபி பாசன விவசாயிகள், தங்களது பகுதிக்கு முறையாக நீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, நடைபெறவுள்ள தேர்தலில் திரளாகப் போட்டியிட முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், தேர்தலில் நிற்பதற்கான விண்ணப்பப் படிவங்களை திங்கள்கிழமை பெற்றுச் சென்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக பிஏபி வாய்க்காலின் கடைமடைப் பகுதியான திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் கிளை வாய்க்கால் பகுதிக்கு பாசனத்திற்கு உரிய நீர் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. பிஏபி சட்ட விதிகளின்படி, 7 நாள் பாசனம், 7 நாள் அடைப்பு என மாதத்துக்கு 2 சுற்று தண்ணீர் விட வேண்டும்.
ஆனால் அவ்வாறு செய்யாமல் 14 நாள்களுக்கு பதில் வெறும் 3 நாள்களுக்கு மட்டும் தண்ணீர் கொடுத்து, மீதமுள்ள 28 நாள்கள் அடைக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் மண் வாய்க்கால் இருந்தபோதுகூட ஆண்டுக்கு 135 நாள்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது கான்கிரீட் கால்வாயாக மாற்றப்பட்டும், தண்ணீர் கடைமடை வரை முழுமையாக வருவதில்லை.
இது தொடர்பாக காங்கயம், வெள்ளகோவில் பகுதி பிஏபி பாசன விவசாயிகள் பிஏபி பொறியாளர்களிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. காங்கயத்தில் இருந்து வெள்ளகோவில் வரையும், உடுமலைப்பேட்டை தொடங்கி பொங்கலூர் வரை உள்ள பிஏபி பாசனப் பகுதிகளை ஆட்சியர் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தையும் காங்கயத்தில் மேற்கொண்டனர். இது தொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 5 முறை சந்தித்தும் பேசினர். ஆனால் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை.
காங்கயம்-வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு குழு விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறாததால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 1000 பேர் காங்கயம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவது என முடிவு செய்து, காங்கயம் தேர்தல் அலுவலரிடம் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப மனுக்களை கேட்டனர். அப்போது, காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் அலுவலகத்தில் போதிய மனுக்கள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காங்கயம், வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் காங்கயம் தேர்தல் அலுவலகத்துக்கு வந்து, தேர்தலில் போட்டியிடுவதற்கான மனுக்களைப் பெற்றுச் சென்றனர். பூர்த்தி செய்யப்பட்ட வேட்பாளர் படிவங்களைப் பெறுவதற்கான கடைசி நாள் வரும் 19 ஆம் தேதி என்பதால், இப்பகுதி விவசாயிகள் மேலும் பலர் வந்து, தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வழங்குவோம் என படிவங்களைப் பெற்றுச் சென்ற விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...