திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நள்ளிரவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 10 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து அதிகாலையில் ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படடது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை மட்டும் 1551 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதேபோல், ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்தனர். இதில் 1752 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்த நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 பேர் வரையில் உயிரிழந்தனர். இதில், இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 4 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலனின்றி உயிரிழந்தனர்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 3.30 மணிக்கு ஆக்ஸிஜன் கொண்டு வந்து பொறுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது.