தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று குற்றம்சாட்டியிருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
எடப்பாடி அரசு மருத்துவமனையில் முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் இறப்போர் எண்ணிக்கை குறைத்து காண்பிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. எல்லா மயானங்களிலும் சடலங்கள் காத்து கிடக்கின்றன. படுக்கை வசதிக்காக ஆம்புலன்ஸிஸ் காத்திருக்கும் நோயாளிகள் இறக்கும் நிலை உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கடந்த ஆட்சியில் அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்தால் மட்டுமே நிலைமை கட்டுக்குள் வரும். காய்ச்சல் முகாம்களை அதிக அளவில் நடத்த வேண்டும். மாநிலம் முழுவதும் கரோனா சிகிச்சை மையங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்குவது, கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதியை அதிகரிப்பது, தொற்றுப் பரிசோதனையை நாளொன்றுக்கு மூன்று லட்சமாக உயர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக அரசின் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் கரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகயளவு ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் அதிகயளவு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படுவதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. தமிழகத்தில்தான் அதிகயளவு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 1.7 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. வியாழக்கிழமை மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
மே 6 -ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழகத்தின் ஒருநாள் ஆக்சிஜன் கையிருப்பு 230 மெட்ரிக் டன். தற்போதைய ஒரு நாள் கையிருப்பு 650 மெ.டன்னாக உள்ளதாக பதிலளித்துள்ளார்.
மேலும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், உதயகுமார், செல்லூர் ராஜூ, பாஜக பேரவை உறுப்பினர்கள் தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டுகின்றனர் என்று கூறினார்.
மேலும் பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். கிராமப்புறங்களில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான டநவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் அறிவிப்பார்.