ராணிப்பேட்டை: தொடர் கனமழை காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது தொற்று குறைந்து வருவதையடுத்து, பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | ‘5 ஆண்டுகளாக இல்லாத அளவு மழை கடந்த 2 மாதங்களில் பொழிவு’
இதையடுத்து, தமிழகத்தில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு நவ. 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தாா்.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. காலை முதலே பரவலாக மழை பெய்துவந்த நிலையிலும், மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு உற்சாகமாக வருகை தந்தனா்.
இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று புதன்கிழமை(நவ.3) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையைத் தொடர்ந்து வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என தெரிகிறது.