சீர்காழி: சீர்காழி புறவழிச்சாலையில் மாடுகள் சாலையின் குறுக்கே ஓடியதால். ஏற்பட்ட விபத்தில் கார் மோதி இரண்டு மாடுகள் பலியாயின. காரில் சென்ற இருவர் படுகாயமடைந்தனர்.
மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன்(51) என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் திருப்பதி சென்று விட்டு இன்று சனிக்கிழமை காலை திரும்பியுள்ளார். வழியில் சீர்காழி பைபாஸ் ரோட்டில் கார் வந்து கொண்டிருந்தபோது ரோட்டில் சுற்றி திரிந்த மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடி உள்ளது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத நிலையில் கார் மாடுகள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாயின.
காரில் சென்ற சுவாமிநாதன் மற்றும் அவரது தாயார் பானுமதி(70) இருவரும் காயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இது குறித்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சீர்காழி பகுதிகளில் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் வீட்டில் வைத்து வளர்க்காமல் சாலையில் விடுவதாலேயே இதுபோன்ற விபத்துக்கள் தொடர்வதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள் இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.