நாகர்கோவில்: நாகர்கோவிலில் பேருந்தில் தகராறில் ஈடுபட்ட நரிக்குறவர் குடும்பத்தை நடு வழியில் இறக்கி விட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த கணவன் - மனைவி மற்றும் 7 வயதுடைய குழந்தை என 3 பேர் கொண்ட நரிக்குறவர் குடும்பத்தினர் நாகர்கோவில், வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை மாலை புறப்பட்ட அரசுப் பேருந்தில் ஏறினர்.
பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பேருந்து நடத்துநர் கணவன் - மனைவி உள்பட 3 பேரையும் பேருந்திலிருந்து இறக்கி விட்டுள்ளார்.
மேலும் நரிக்குறவர் குடும்பத்தின் உடைமைகளையும் பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசியுள்ளார். இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது.
இதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் திருவட்டாறைச் சேர்ந்த நெல்சன் (45), நடத்துநர் ஜெயதாஸ் (44) ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அரசுப் போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் அர்விந்த் வியாழக்கிழமை இரவு உத்தரவிட்டார்.