கோவை தொண்டாமுத்தூர், வனச்சரகத்தில் உள்பட்ட ஆலந்துறை அருகேயுள்ள செம்மேடு கிராமம், குளத்தேரி பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலியானது.
கோவை நரசிபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர், இருட்டுப்பள்ளம், செம்மேடு, ஆலந்துறை, மற்றும் ஆனைகட்டி, கணுவாய் ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. ஊருக்குள் வரும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன.
இதையும் படிக்கலாமே.. தைப்பூசத்தன்று அரசு பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
இதன் காரணமாக கோவை தொண்டாமுத்தூர், வனச்சரகத்தில் உள்பட்ட ஆலந்துறை அருகேயுள்ள செம்மேடு கிராமம் பகுதியில் உள்ள குளத்தேரி பகுதியில் துரை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை சுற்றி அவர் மின்வேலி அமைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் காட்டு யானை ஒன்று அந்தப் பகுதியில் உணவுக்காக வந்தது. அப்போது மின்வேலியில் பட்டு தூக்கி வீசப்பட்டு ஆண் யானை பரிதாபமாக இறந்தது.
அதிகாலை இயற்கை உபாதை கழிக்க அந்தப் பகுதி மக்கள் காட்டுப் பகுதிக்கு சென்றபோது யானை இறந்து கிடந்ததை பார்த்து தொண்டாமுத்தூர் வனச்சரகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து விவசாய நிலத்திற்கு மின் வேலி அமைத்திருந்த துரையிடம் காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.