தீபாவளி விடுமுறை : திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்

தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து திருநள்ளாறு கோயிலுக்கு பல்லாயிரகணக்கானோர் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர்.
சனீஸ்வரபகவானை தரிசனம் செய்ய வரிசை தடுப்பில் வரிசையில் நிற்கும் பக்தர்கள்.
சனீஸ்வரபகவானை தரிசனம் செய்ய வரிசை தடுப்பில் வரிசையில் நிற்கும் பக்தர்கள்.


காரைக்கால்: தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து திருநள்ளாறு கோயிலுக்கு பல்லாயிரகணக்கானோர் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுகிரஹ மூர்த்தியாக தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார்.

வாரத்தில் சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்துவந்து தரிசனம் செய்வது வழக்கம். கரோனா பொது முடக்கத் தளர்வுகளின் அடிப்படியில் கடந்த சில வாரங்களாக பக்தர்கள் வரத்து இங்கு மிகுதியாகியுள்ளது.

எனினும் 6-ஆம் தேதி சனிக்கிழமை பக்தர்கள் எதிர்பார்ப்பைவிட அதிகமாக வந்துள்ளனர். தீபாவளியையொட்டி  விடுமுறை நாளாக உள்ளதால், வெள்ளிக்கிழமை காலை முதல் இக்கோயிலுக்கு பக்தர்கள் மிகுதியாக வரத் தொடங்கினர். சனிக்கிழமை அதிகாலை முதல் திருநள்ளாறு வடக்கு வீதி, தெற்கு வீதிகளில் நீண்ட வரிசை வாயிலாக கோயிலுக்குள் செல்கின்றனர். 

கோயிலுக்குள் சுவாமிகளை பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்துத் திரும்பும் வகையில் போலீஸார், கோயில் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கரோனா தடுப்பு விதிகளின்படி அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்பதை கண்காணித்து கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கின்றனர்.

மூலவர் தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை அம்பாள் சந்நிதிகளில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்துவிட்டு சனீஸ்வரபகவானை தரிசனம் செய்யும் வகையில் வரிசை தடுப்பு அமைப்பு செய்யப்பட்டுள்ளது.

கட்டண வரிசை, கட்டணமில்லா வரிசையில் பக்தர்கள் தரிசனம் செய்துவருகின்றனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் தில தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். பக்தர்கள் பலரும் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.

திருநள்ளாறு கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை அதிகாலை முதல் திருநள்ளாறு வடக்கு வீதி, தெற்கு வீதிகளில் நீண்ட வரிசை வாயிலாக கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள்.

நளன் தீர்த்தக் குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்கு தண்ணீர் விடாததால், பக்தர்கள் பலரும் குளக்கரைக்குச் சென்று பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் தனியார் கட்டடத்தில் ரூ.50, ரூ.100 கட்டணம் செலுத்தி நீராடிவிட்டு செல்கின்றனர்.

கடந்த சனிப்பெயர்ச்சி விழாவுக்குப் பின் முதல் முறையாக திருநள்ளாறு கோயிலில் பெருமளவு பக்தர்கள் சனிக்கிழமை வந்துள்ளனர்.

வெளியூரிலிருந்து வந்த சில மணி நேரம் வரிசையில் காத்திருந்தாலும், கோயிலில் திருப்தியாக சுவாமி  தரிசனம் செய்ய முடிந்தது என பக்தர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com