தமிழகத்தில் கனமழையால் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் நேற்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். திருவாரூர், கிருஷ்ணகிரி, மதுரை மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். 94 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மேலும், 950 வீடுகள், குடிசைகள் சேதமடைந்துள்ளன. மேலும், 43 ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அணைகளில் நீர் இருப்பை கண்காணிக்க நீர்வளத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடற்கரையோரப் பகுதிகளில் 425 இடங்களில் எச்சரிக்கை மணி வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 7 மாவட்டங்களில் 3,154 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பகல் நேரத்தில் மட்டுமே ஏரியைத் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொள்ள 1070, மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களைத் தொடர்பு கொள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்த மையங்கள் மக்களுக்காக 24 மணி நேரமும் செயல்படுவதாகவும் கூறினார்.