
அரியலூர்: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மனைவி ஜெயலெட்சுமி. இருவரும் வழக்குரைஞர்கள் ஆவர். இவர்களுக்கு இரண்டு மகள் உள்ளனர். இரண்டாவது மகள் கனிமொழி, நாமக்கல் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து, 600-க்கு 562.28 மதிப்பெண் பெற்றிருந்தார்.
மருத்துவராக வேண்டும் என்ற கனவைத் தொடர்ந்து அவர் தஞ்சாவூரில் தாமரை இன்டர் நேஷனல் பப்ளிக் பள்ளியில் நீட் தேர்வை எழுதிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தனது தாய் ஜெயலட்சுமியிடம் நீட் தேர்வில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறி புலம்பியுள்ளார்.
மேலும் இந்த நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர முடியுமா? மருத்துவராக முடியுமா? என்ற மன உளைச்சலில் இருந்துள்ள கனிமொழி திங்கள்கிழமை நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தங்களது மகள் கனிமொழி நீட் தேர்வு தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில், நீட் தேர்வு தோல்வி பயத்தில் ஏற்கனவே அனிதா, விக்னேஷை தொடர்ந்து தற்போது மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.