சென்னை: மகளிர், இலவச பயணப் பேருந்துகளை அடையாளம் காணும் வகையில், இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றப்பட்ட சாதாரண கட்டணப் பேருந்துகளின் சேவை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் தொகுதியில் முதற்கட்டமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி மீட்பு: ஆனால்?
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளுக்கு பிங்க் வண்ணம் தீட்டப்பட்ட 50 பிங்க் பேருந்துகள் இயக்கத்தையும், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து ஐந்து புதிய வழித்தடங்களில் 10 சிற்றுந்துகள் இயக்கத்தையும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக சென்னையில், மெரினா கடற்கரை, அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் தெரிந்து கொள்ள ஏதுவாக, பிங்க் வண்ணம் தீட்டப்பட்ட 50 பிங்க் பேருந்துகள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மகளிர் எளிதாக தெரிந்து கொள்ள ஏதுவாக, இனிவரும் காலங்களில், மற்ற மாவட்டங்களில் இயக்கப்படும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளுக்கும், பிங்க் வண்ணம் தீட்டப்பட்டு இயக்கப்படும்.
இந்த திட்டத்தின்படி, பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் வெள்ளை போர்டு கொண்ட சாதாரணக் கட்டண பேருந்துகளின் முகப்பு மற்றும் பின்புறம் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக 50 இளஞ்சிவப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
இதையும் படிக்க | பச்சைக் குத்திக் கொண்ட இருவருக்கு எச்ஐவி: எச்சரிக்கும் மருத்துவர்கள்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பதவியேற்றதும் கையெழுத்திட்ட முதல் ஐந்து திட்டங்களில் முக்கியமானது சாதாரணக் கட்டண பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என்ற திட்டம்தான்.
இந்த திட்டத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், ஒரு பேருந்து நிலையத்திலோ, நிறுத்தத்திலோ காத்திருக்கும் மகளிர், சாதாரண கட்டணப் பேருந்தை எளிதாக அடையாளம் காணும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இளஞ்சிவப்பு நிற பேருந்துகளில் மகளிர் இலவசமாகவும், ஆண்கள் கட்டணம் செலுத்திலும் பயணிக்கலாம்.