
சென்னை: வங்கக் கடலில் நாளை புயல் சின்னம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்த நிலையில், தற்போது மீண்டும் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில், அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது.
இன்று இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக உருவாகியிருப்பதாகவும், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை புயலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இது மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். இது கணிக்கப்பட்டபடி புயலாக மாறினால் மாண்டஸ் என பெயர் சூட்டப்படும். இந்த பெயர் ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்திருக்கும் பெயராகும்.
வங்கக் கடலில் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தமிழக அரசு கேட்டுக் கொண்டதால் அரக்கோணத்திலிருந்து தலா 25 வீரர்களைக் கொண்ட 6 படையினர் 6 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.