சென்னையில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 76 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
800 கிராம் கஞ்சா, 14.3 கிலோ கிராம் குட்கா, 555 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, போதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs (DAD) மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராகவும், குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிராகவும், ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்த சோதனையில், பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மற்றும் இதர இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். வலிநிவாரண மாத்திரைகள் மற்றும் 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 71 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.