மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தாயமங்கலம் செல்லும் சாலையில் அலங்காரக்குளத்தில் எழுந்தருளியுள்ள ஒருங்கிணைந்த குலாலர் சமூக நலச்சங்கத்திற்கு பாத்தியமான ஸ்ரீ வைகைகரை அய்யனார், அலங்கார குளம் சோணையா சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை யாகபூஜைகள் தொடங்கின.
கும்பாபிஷேகத்தன்று நான்காம் கால பூஜை நிறைவடைந்து மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்று முடிந்ததும் கடம் புறப்பாடு நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை கண்டு தரிசித்த கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள்.
அதைத்தொடர்ந்து காலை 10:25 மணிக்கு மூலவர் அய்யனார் சுவாமி, சோணையா சுவாமி விமானக் கலசங்கள் மற்றும் கோயில் முன் மண்டப விமானக் கலசம் நுழைவாயில் விமானக் கலசம் ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் குலால சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து கோயில் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயிலில் திரண்டிருந்த திரளானோர் கும்பாபிஷேகத்தைக் கண்டு தரிசித்தனர்.
இதையும் படிக்க | சீர்காழி அருகே பாய்லர் வெடித்து இருவர் பலி; 3 பேர் காயம்
பின்னர் புனித நீரால் அய்யனார்,சோணையா சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன.
மதியம் கோயில் அருகே நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் வீ.காளீஸ்வரன் உள்ளிட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.