தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படுவது உறுதி என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது கரோனா (ஒமைக்ரான்) பரவல் அதிகரித்து வருவதால் பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளிகள், கல்லூரிகளும் ஒரு சில மாநிலங்களில் மூடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இன்று(ஜன.3) முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதர வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி தொடங்கப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று கூறினார்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் கலைஞர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னதாகவே, ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.