மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 85,129 கன அடியாக சரிந்தது.
கர்நாடகம் மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரளம் மாநிலம் வயநாட்டிலும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ் சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இரு அணைகளும் நிரம்பின.
நீர் வரத்து: அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. உபரி நீர் வரத்து காரணமாக கடந்த மூன்று நாள்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக புதன்கிழமை பகல் 12 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 1,00,153 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பின்னர் நீர்வரத்து மெல்ல குறையத் தொடங்கியது. வியாழக்கிழமை காலை அணையின் நீர் வரத்து வினாடிக்கு 85,129 கன அடியாக சரிந்தது.
இதையும் படிக்க | பாலின சமத்துவமின்மை: இந்தியாவுக்கு 135-ஆவது இடம்
நீர்மட்டம்: வியாழக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 110.14 அடியாக உயர்ந்தது.
நீர் திறப்பு: அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,129 கன அடியாக சரிந்தது.
நீர் இருப்பு: அணையின் நீர் இருப்பு 78.60 டி.எம்.சியாக உள்ளது. நீர்வரத்து சரிந்தாலும் பருவ மழை காரணமாக தொடர்ந்து தண்ணீர் வரும் வாய்ப்பு உள்ளதால் இன்னும் சில தினங்களில் மேட்டூர் அணை நிரம்பும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.