ஏன் தாமதம்? நாளைக்குள் மாணவியின் உடலைப் பெறாவிட்டால் காவல்துறை நடவடிக்கை: நீதிபதி

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலைப் பெற ஏன் தாமதம் செய்கிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏன் தாமதம்? நாளைக்குள் மாணவியின் உடலைப் பெறாவிட்டால் காவல்துறை நடவடிக்கை: நீதிபதி

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலைப் பெற ஏன் தாமதம் செய்கிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, முதல் உடற்கூறாய்வுக்கும் இரண்டாவது உடற்கூறாய்வு அறிக்கைகளுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை, இரண்டாவது உடற்கூறாய்வு அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை என்று தடயவியல் நிபுணர் சாந்தகுமார் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். 

உடற்கூறாய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து பெற்றோர்கள் தெரிவிக்கவே, மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகளையும் மூன்று மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இரண்டு முறை உடற்கூறாய்வு செய்யும் விடியோக்களையும் மருத்துவக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தகுந்த தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் நீதிபதி, 'மாணவியின் உடலை பெற ஏன் தாமதம் செய்கிறீர்கள்? அவரது உடலை வைத்து பந்தயம் காட்டாதீர்கள். நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை பெற்றுக்கொள்வதில் என்ன தாமதம்? ஒவ்வொரு முறையும் பிரச்னையை ஏற்படுத்துகிறீர்கள். அமைதியாக தீர்வு காண வேண்டும் 

மாணவியின் மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகின்றனர். அது பெற்றோருக்கு தெரியாதா? 

சமூக ஊடகங்கள் பொய்யான செய்தியை பரப்புகின்றன. இந்த விவகாரத்தில் அனைவரும் தங்களை நீதிபதியாகவும், மருத்துவ நிபுணர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். 

இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோருக்கு நீதிமன்றம் அனுதாபம் தெரிவித்துக்கொள்கிறது. கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகளை விரைந்து நடத்துங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். 

மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள சம்மதிக்க வேண்டும். நாளை காலை 11 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இல்லையெனில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். மாணவியின் உடலை பெற்றுக்கொள்வது தொடர்பாக இன்று பகல் 12 மணிக்கு முடிவைத் தெரிவிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com