முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளுக்கு ஒப்பந்தங்களை வாங்கியதில் ரூ.4,800 கோடி முறைகேடு செய்ததாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. அதன்பிறகு இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது.
இதையும் படிக்க | தொடரும் அமளி: மாநிலங்களவை பகல் 12; மக்களவை 11.45 வரை ஒத்திவைப்பு
தமிழக அரசு தரப்பில் இவ்வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் ஆர்.எஸ். பாரதி அவகாசம் கோரியதை தொடர்ந்து ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.