சென்னை: வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்கவிருந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடும் போக்குவரத்து நெரிசலால் தாமதமாகியுள்ளது.
இதனால் பொதுக்குழு கூட்டம் தொடங்கும் நேரம் தாமதமாகும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி இருவரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமாக வந்து சேர்ந்தனர்.
இன்று காலை 8 மணிக்கு சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்திலிருந்து புறப்பட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபம் அமைந்திருக்கும் வானகரம் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் 11.15 மணிக்குத்தான் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி மண்டபத்துக்கு வருகை தந்தார்.
முன்னதாக, அதிமுக பொதுக் குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வருகை தந்தார்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்குத் தொடங்கவிருந்த அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது.