தமிழக ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் இன்று மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு, 'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். வேண்டுமென்றே ஆளுநர் இவ்வாறு செய்கிறார். கூட்டுறவுத் துறை தொடர்பான மசோதாவையும் நிறுத்தி வைத்துள்ளது ஏன்?
தமிழகத்துக்கு ஆளுநர் தேவை இல்லை, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். ஆளுநர் ரவி சட்டப்படி நடக்கவில்லை, அரசியலமைப்பை பின்பற்றவில்லை.
நாங்கள் என்ன காட்டு ராஜ்ஜியமா நடத்துகிறோம்? நாங்கள் எப்படி அரசை நடத்துவது? ஆளுநரை மாற்ற வேண்டும்' என்று பேசியுள்ளார்.
முன்னதாக மக்களவையில் டி.ஆர்.பாலு பேசிய அதேநேரத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ராஜ்பவனில் சந்தித்துப் பேசினார்.
இதையும் படிக்க | ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு