விக்னேஷ் மரணம்: 5 காவலர்களை பணியிடை நீக்கம் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த விக்னேஷ் வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம். 
விக்னேஷ் மரணம்: 5 காவலர்களை பணியிடை நீக்கம் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
Published on
Updated on
2 min read

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த விக்னேஷ் வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம். 

கடந்த ஏப்ரல் 18-ம் தேதி இரவு சென்னை கெல்லீஸ் சந்திப்பில் தலைமைச் செயலக காலனி போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை சோதனை செய்தபோது அதில் இருந்த இருவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். அவர்களை சோதனையிட்ட காவல்துறையினர் 5 கிராம் கஞ்சா மற்றும் பட்டா கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டதில் ஒருவர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரமேஷ் என்பதும் மற்றொருவர் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும் தெரியவந்தது. இதில் கஞ்சா மற்றும் பட்டாக் கத்தியை மறைத்து வைத்திருந்த விக்னேஷ், சென்னை மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டுபவர் என தெரியவந்தது.

பின்னர் திடீரென காவல்நிலையத்தில் விக்னேஷ் உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைச் செயலக காலனி காவல்நிலைய இணை ஆய்வாளர் பெருமாள், தலைமைக் காவலர் தீபக், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் இதுகுறித்து தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. மேலும் இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் அருண் ஹால்தர் சமீபத்தில் தமிழகம் வந்து உயிரிழந்த விக்னேஷ் நண்பர் ரமேஷிடம் புழல் சிறையில் வைத்து விசாரணை மேற்கொண்டார்.

அப்போது தமிழக காவல்துறையினர் தங்களிடம் நடந்து கொண்ட விதங்கள் குறித்தும் புழல் சிறையில் தன்னை தொடர்ச்சியாக துன்புறுத்துவதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இதன் அடிப்படையில் இன்றைய தினம் உத்தரவு பிறப்பித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இவ்வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், புழல் சிறையில் உள்ள ரமேஷ் என்பவர் விடுதலை செய்யப்பட்டு அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் வழக்கில் தொடர்புடைய ரமேஷ் மற்றும் விக்னேஷ் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை காவல்துறை உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், இந்த உத்தரவுகளை 2 வாரத்திற்குள் செயல்படுத்துமாறு தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com