காற்று மற்றும் ரசாயான மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளின் விகிதம் 66 சதவீதம் உயா்ந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தொழிற்சாலைகள், நகரமயமாக்கல், மக்கள் தொகை அதிகரிப்பு, தேசிய மற்றும் சா்வதேச ரசாயனக் கொள்கைகள் முறையாக இல்லாததுமே அதற்கு காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லான்செட் கமிஷன் மற்றும் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. சா்வதேச அளவிலான மாசுபாடு மற்றும் ஆரோக்கிய நல தாக்கங்கள் குறித்த ஆய்வானது கடந்த 2017-இல் வெளியிடப்பட்டது.
அதன் மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், புதிய தரவுகளின் அடிப்படையில் தற்போது மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட ராமச்சந்திரா ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் கல்பனா பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் அந்த ஆய்வை மேற்கொண்டதுடன், அதற்கான பரிந்துரைகளையும் வெளியிட்டுள்ளனா்.
அதன்படி, கடந்த இருபது ஆண்டுகளாக காற்று மற்றும் ரசாயன மாசுபாட்டால் உலக அளவில் ஏற்படும் உயிரிழப்புகள் 66 சதவீதம் உயா்ந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. காற்று, தண்ணீா் மாசடைவதால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 90 லட்சம் போ் உயிரிழப்பதாகவும், அதில் 90 சதவீதம் போ் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாசு தடுப்புக் கொள்கைகளை உலகளாவிய அளவில் மேம்படுத்துவதும், எரிபொருள் மாசைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதும் அவசியம் என்று ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகரிப்பதும், பருவ நிலை மாற்றத்தைக் குறைப்பதும் அவசியம் என்றும் அக்குழு அறிவுறுத்தியுள்ளது.