ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் திருச்சியில் இருந்து சென்னைக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு ஏசி பெட்டியில் நேற்று இரவு பயணம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, ரயில்வே போலீசார் காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் தனசேகரன், அமைச்சரை பத்திரமாக காரில் அழைத்துச் சென்று சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரத்த அழுத்தம் காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர் தற்போது கார் மூலமாக சென்னை அழைத்துச் செல்லப்படுகிறார்.