வண்ண விளக்கில் ஜொலித்த ஆழியாறு அணை!
கோவை பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்ட தொடக்க தினத்தை முன்னிட்டு ஆழியாறு அணை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை உள்பட 10 அணைகள் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இதில் விவசாயத்துக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது ஆழியாறு அணை.
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களால் 1957ல் கட்ட ஆரம்பித்து 1962ல் அணை திறக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை, வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழை நீர், வனப்பகுதி வழியாக ஆழியாறு அணைக்கு வருகிறது.
120 அடி கொண்ட அணையில் தற்போது 117 அடி வரை நிரம்பி உள்ளதால் எட்டு மதகுகள் வழியாக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி விவசாய நிலங்களுக்கும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் அணையின் நீர் பயன்படுத்தப்படுகிறது. அணையின் மறுபுறம் ஆழியாறு பூங்காவும் உள்ளது.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன தினத்தை முன்னிட்டு ஆழியாறு அணை முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. இது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக உள்ளது. வால்பாறை செல்லும் வழியில் உள்ள 9-வது வளைவில் அணையின் காட்சியை பார்த்தால் பிரமிப்பாக உள்ளது என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.