புதுச்சேரியில் தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் 2019 முதல் 2021 வரை 3,410 சாலை விபத்துகள் நடத்துள்ளன. இருச்சக்கர வாகனங்களில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயணம் செய்யும்போது இரண்டு பேருமே தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து பயணம் செய்ய வேண்டும்.
இருச்சக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் அத்துடன் தரமான தலைகவசமும் விற்பனை செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு!
சாலைகளில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் மற்றும் பயணிப்போருக்கு முதல்முறை ரூ.1000 அபராதம் மற்றும் 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் சமீப காலமாக ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. பொற்றோர்களின் அனுமதியுடன் சிறுவர்கள் வாகனத்தை ஓட்டுவதாக தெரிகிறது. இதனால் வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 அபதாரம் விதிக்கப்படும். வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஒரு ஆண்டு ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயதுவரை பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து மற்றும் சிறார் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்படும்.
மேலும், பொதுமக்கள் தகுதியான தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவது, தவறான திசையில் ஓட்டுவது சட்டப்படி குற்றமான செயல். இரண்டு நபர்கள் மேல் இருச்சக்கர வாகனத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.