காரைக்கால்: திருநள்ளாறு அருகே கட்டுப்பாட்டை இழந்து பூட்டியிருந்த கடையில் பேருந்து புகுந்த விபத்தில், பேருந்தில் இருந்தில் இருந்த பயணிகள் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூர் பகுதியிலிருந்து காரைக்கால் பேருந்து நிலையம் நோக்கி, தனியார் பேருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் வந்துகொண்டிருந்தது. பேருந்தை அய்யப்பன் என்பவர் ஓட்டிவந்துள்ளார்.
திருநள்ளாறு பகுதி செல்லூர் அருகே வந்துகொண்டிருந்தபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பூட்டியிருந்த சாலையோர கடையொன்றில் புகுந்தது.
எதிர்பாராத வகையில் நடந்த விபத்தால் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பேருந்தினுள் முன் வரிசையில் உட்கார்ந்து வந்தவர்கள் உள்ளிட்ட 18 பேர் காயமடைந்தனர். கடை பூட்டப்பட்டிருந்ததால் வெளிப்புறத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை. சாலையோரத்தில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. பேருந்தின் முன் பகுதி சேதமடைந்தது.
திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் இருந்து விபத்து ஏற்பட்ட பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் விரைந்து சென்றன. பேருந்தினுள் காயமடைந்திருந்தோரை மீட்டு அப்பகுதியினர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மருத்துவக் குழுவினர் அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர். பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், அனைவரும் விரைவில் சிகிச்சை முடிந்து அனுப்பிவைக்கப்படுவர் எனவும் மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: அதென்ன புனர்ப்பு தோஷம்: எந்த வகையில், யாருக்கு தீங்கு செய்யும்?
போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் மரியகிறிஸ்டின் பால் மற்றும் திருநள்ளாறு காவல்துறையினர் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று, பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பேருந்து விபத்துக்குள்ளான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.