தூத்துக்குடி: குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் குருத்தோலை ஏந்தியபடி பவனியாக சென்றனர்.
புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு மற்றும் கிறிஸ்துு உயிர்தெழும் நாள் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறு ஆக கிறிஸ்துவர்களால் அனுசரிக்கப்படுகிறது. இயேசுபிரான் தனது பாடுகளை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்காக ஒலிவ மலையில் இருந்து குருத்தோலை ஏந்தியபடி கழுதையில் ஆயிரக்கணக்கான மக்களுடன் ஆரவாரமாக ஓசன்னா பாடலை பாடியபடி ஜெருசேலம் நகர் நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் நினைவாக குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி தூத்துக்குடியில் உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் பங்குத் தந்தை குமார் ராஜா தலைமையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் குருத்தோலை ஏந்தியபடியும் ஓசன்னா பாடலை பாடியபடி பவானி ஆக சென்றனர்.
இதேபோல, தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. லூர்தம்மாள்புரம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அருள்தந்தை பவுல் அலங்காரம் சுவாமி திருவுருவம் கேபி முன்பு இருந்து, பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ அவர்கள் தலைமையில் குருத்தோலை கையில் பிடித்தவாறு பவனியாக ஆலயத்துக்கு வந்தனர்.
பின்னர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.