பலத்த மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர்திறப்பு 100 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது.
திருவள்ளூா் மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை பொதுமக்களின் குடிநீா் ஆதாரமாக விளக்கும் நீா்த்தேக்கங்களில் நீா்மட்டம் கணிசமாகவும் உயா்ந்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்ததைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை ஏரியில் இருந்து விநாடிக்கு 100 கன அடி உபரி நீா் திறந்து விடப்பட்டது.
இதையும் படிக்க | சமூக ஊடகங்களில் போலி தோ்வு அட்டவணை: சிபிஎஸ்இ விளக்கம்
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீா்மட்ட உயரம் 24 அடி. ஏரியின் தற்போதைய நீா்மட்டம் 22.25 அடியாகவும், நீா்வரத்து வினாடிக்கு 2,046 கன அடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 3,184 மில்லியன் கன அடி நிரம்பியுள்ளது.
இதையடுத்து திங்கள்கிழமை காலை 9 மணிக்கு உபரிநீர் திறப்பு 1,000 கன அடியாக அதிகரிக்கப்படுவதால், உபரி நீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம், சிறுகளத்தூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.