அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் புறப்பட்டுச் சென்றனர்.
ஒற்றைத் தலைமை சர்ச்சைகளுக்கு மத்தியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெறுகிறது.
கடந்த சில தினங்களாக அதிமுகவில் நிலவி வந்த ஒற்றைத் தலைமை சர்ச்சை அக்கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தது. இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் எனவும் பொதுக்குழுவில் முன்வைக்கப்பட உள்ள வரைவு தீர்மானங்களைத் தவிர இதர விவாதங்களை எழுப்பக் கூடாது எனவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்த நிலையில் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழு: ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு
முன்னதாக இதுதொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பில் பொதுக்குழுவை நடத்தத் தடையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழுவில் அதிமுகவின் சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ள தடை இல்லை எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து பொதுக்குழுவில் அதிமுக சட்டவிதிகள் திருத்தம் மேற்கொள்ள தடைகோரி நேற்று நள்ளிரவு இதுதொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை நிறைவேற்ற தடை விதித்தனர்.
இந்நிலையில் இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக தனித்தனியே வானகரம் புறப்பட்டனர்.
ஒற்றைத் தலைமை சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு முக்கிய கவனம் பெற்றுள்ளது.